Friday, June 8, 2018

முருகனை வழிபடுவதன் சிறப்பு

ஈஸ்வரனின் அம்சமான முருகன், இப்பிறவியிலும் இன்பத்தை அளித்து, மறுபிறவியிலும் இன்பத்தை அளிக்க வல்லவன். முருகனை வணங்குபவர்கள் வாழ்வு எப்போதும் மலர்ந்திருக்கும். இதனை உணர்த்தவே முருகனின் வலப்புறத்தில் வள்ளியும், இடப்புறத்தில் தெய்வயானையும் இருப்பதாக ஐதீகம். வேடர்களிடத்தே மானிடப் பிறவியாகப் பிறந்து வளர்ந்த வள்ளி மண்ணுலக இன்பத்தினை நல்குவாள். இந்திரனின் மகளாகப் பிறந்து, அவனது வாகனமாகிய ஐராவதத்திடம் வளர்ந்த தெய்வயானை, மேலுலக இன்பத்தை அளிப்பாள். முருகனின் கையில் உள்ள ஞானவேல் அவனது பக்தர்களுக்கு ஞானத்தை நல்கும். இம்மூன்றையும் பெற்ற பக்தன், இகபர சௌபாக்கியம் பெற்று, முக்தி அடைவது உறுதி.

முருகனின் வலது கண் சூரியனையும், இடது கண் சந்திரனையும், மூன்றாவது கண் அக்னியையும் குறிக்கும். வலபுறத்தில் நின்றிருக்கும் வள்ளி தனது கரத்தில் தாமரை மலரை ஏந்தி இருப்பதைப் பார்க்க முடியும். தாமரை சூரியனைப் பார்த்தவுடன் மலர்ந்து, பகலெல்லாம் பூத்திருக்கும். இடபுறத்தில் உள்ள தெய்வயானை தனது கரத்தில், நீலோத்பல மலரை ஏந்தியிருப்பாள். நீலோத்பல மலர் சந்திரனைக் கண்டவுடன் மலர்ந்து இரவில் பூத்திருக்கும். ஆகவே முருகனை வழிபடும் பக்தர்கள் வாழ்வு, வள்ளி, தெய்வயானை இருவரின் அருளால் எந்நேரமும் மலர்ந்து பூத்திருக்கும் என்பது உறுதி.



No comments:

Post a Comment