Friday, June 8, 2018

விகட சக்கர விநாயகர்

தக்கனின் யாகத்தை அழிக்க, தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஈசன் வீரபத்திரரைத் தோற்றுவித்து அனுப்பினார். அவர் தக்கனின் யாகத்தை அழித்து, தேவர்களை வதம் செய்து, திருமாலுடன் போர் புரியும் போது, திருமால், வீரபத்திரரின் மேல் தனது சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் வீரபத்திரரை நோக்கி விரைந்து வர, அதனை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் இருந்த கபாலம் ஒன்று விழுங்கியது.

தனது சக்கராயுதத்தைத் திரும்பப் பெற, திருமால் தனது சேனாதிபதியான விஷ்வக்சேனரை அனுப்பினார். சிவாலயங்களில் முதலில் விநாயகரை வழிபடுவது போல் பெருமாள் கோவில்களில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். 'விஷ்வக்' என்றால், எல்லா இடமும் என்று பொருள். எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செல்லக்கூடிய படைகளை உடையவர் என்றும் பொருள் உண்டு.

விஷ்வக்சேனர் காஞ்சியை அடைந்து, சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, ஈசனை எண்ணி தவமிருந்தார். அவரின் முன் வீரபத்திரர் காட்சியளித்து, “வேண்டிய வரம் கேள்எனக் கூற, விஷ்வக்சேனரும் திருமாலின் சக்கரத்தைத் திரும்பத் தருமாறு வேண்டினார். வீரபத்திரர், அதனை விழுங்கிய கபாலத்திடமே எப்படியாவது கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூற, விஷ்வக்சேனர், தனது கை கால்களைக் கோணலாக்கிக் கொண்டு தள்ளாடியபடி ஒரு விகட நடனமாடினார். அதைக் கண்டு வீரபத்திரர் உள்ளிட்ட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அவர் அணிந்திருந்த மாலையிலிருந்த கபாலமும் சிரிக்க, அதன் வாயிலிருந்து திருமாலின் சக்கராயுதம் கீழே விழுந்து உருண்டோடியது. அதனை விஷ்வக்சேனர் எடுக்கும் முன்னர், விநாயகர் அதனை எடுத்துக் கொண்டார்.

விஷ்வக்சேனர் விநாயகரை வணங்கி, தன்னிடம் திருமாலின் சக்கராயுதத்தைத் திரும்பத் தருமாறு வேண்ட, விநாயகர் தனக்காக மீண்டும் ஒரு முறை தன் முன் விகட கூத்தாடினால் சக்கரத்தைத் திரும்பத் தருவதாகக் கூறினார். அவர் வேண்டிக் கொண்டவாறே விஷ்வக்சேனரும் மறுபடியும் விநாயகர் முன் விகட கூத்தாடி, விநாயகரின் அருள் பெற்று, அவரிடமிருந்து சக்கரத்தைப் பெற்று, அதனைத் திருமாலிடம் சேர்ப்பித்தார்.

இவ்வாறு விகடக் கூத்தை இரசித்த விநாயகரே இன்றும் விகட சக்கர விநாயகராக காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக அமர்ந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment